

தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை அர்ச்சனா நகர், கலைவாணி தெருவில் வசித்து வந்தவர் சம்பத் நாயுடு (57). இவர் செங்கல்பட்டு மாவட்டம், பீர்க்கன்காரணை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பில் இருந்த இவர், வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பீர்க்கன்காரணை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், உள்ளூர் மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இறந்த சம்பத்துக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர். 1989-ம் ஆண்டில் பதிவறை எழுத்தராக பணியில் சேர்ந்த சம்பத் நாயுடு, 2011-ம் ஆண்டு செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.