தூத்துக்குடி மாவட்ட - அரசு இசைப்பள்ளியில் நாளை மாணவர் சேர்க்கை தொடக்கம் :
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள்.
இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அரசு விடுதி வசதியும், வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை கோயில்களில் தேவாரம் ஓதுவார் பணியில் சேர்ந்திட முன்னுரிமை அளித்து வேலை வாய்ய்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், டி.டி.மேலூர், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி-2 என்ற முகவரியிலும் செல்போன் எண் 9487739296-லும் தொடர்பு கொள்ளலாம்.
