

காவேரிப்பட்டணம் அருகே கூழ் வியாபாரி கொலை வழக்கில், மனைவி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கூரம்பட்டி தேனோடை நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் ஆன நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முனியம்மாள் (30) என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூழ் வியாபாரத்திற்கு இருசக்கர வாகனத்தில் ராஜேந்திரன், காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேங்கை நகர் என்னுமிடத்தில் செல்லும்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முனியம்மாளுக்கும், கனகமூட்லு மேலேரிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த செங்கல் வியாபாரி குமார் (33) என்பவருக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. இதனை ராஜேந்திரன் கண்டித்து வந்தார். ஆத்திரமடைந்த முனியம்மாள், குமார் ஆகியோர், தனது நண்பர்கள் உதவியுடன் ராஜேந்திரனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குமார், முனியம்மாள், கூரம்பட்டி பவுன்ராஜ் (25), மலையாண்டஹள்ளி திருப்பதி (25), குட்டூர் ரகு (23), பார்த்திபன் (25) உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய குட்டூர் வடிவேல் (25), கீழ்புதூர் சதீஷ் (19) ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.