

திருநெல்வேலி மாவட்டத்தில் நிதி நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டால், ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடன் தவணை மற்றும் வட்டியைக் கேட்டு, நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. திருநெல்வேலியில் நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வங்கி மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை வகித்தார்.
நிதிநிறுவனங்கள் எவ்விதத்திலும் கட்டாய வசூலில் ஈடுபடக்கூடாது. கடனுக்கான தவணைத் தொகையை வசூல் செய்வதில் கடினப் போக்கை அறவே தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர்திட்ட அலுவலகத்தை 0462 250 0302 என்ற எண்ணிலும், இந்திய ரிசர்வ் வங்கியின் cms.nbfcochennai@rbi.org.in என்ற இமெயில் முகவரியிலும் தெரிவிக்கலாம் என, ஆட்சியர் தெரிவித்தார்.