

பிரபல ஓவியர் இளையராஜா கரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 43.
தமிழ் பண்பாடு, மனிதர்களின் உணர்வுகள் உள்ளிட்டவற்றை தனது நுட்பமான ஓவியங்களால் வெளிப்படுத்தியவர். சென்னை கொளத்தூரில் வசித்து வந்த இளையராஜா சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்காக கும்பகோணம் சென்று வந்துள்ளார். அதன்பிறகு, பரிசோதனை செய்ததில், நுரையீரல் முழுவதும் கரோனா தொற்று பரவியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, எழும்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 6-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
ஓவியர் இளையராஜா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், கலைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.