

திருச்சி மாவட்ட வன அலுவலராக இருப்பவர் சுஜாதா. இவர் கடந்த மார்ச் மாதம் துறையூர் வனச் சரகரான பொன்னுசாமிக்கு ‘மெமோ' கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி, மாவட்ட வன அலுவலகத்துக்கு வந்து தன்னை மிரட்டியதாகவும், அறைக் கதவை உடைத்துச் சென்றதாகவும் செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் மாவட்ட வன அலுவலர் சுஜாதா புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வனச் சரகர் பொன்னுசாமி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, வனச் சரகர் பொன்னுசாமி மீது மாவட்ட வன அலுவலர் சுஜாதா பொய் புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறை முதன்மை வன பாதுகாவலருக்கு தமிழ்நாடு வனத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் புகார் அனுப்பியுள்ளனர்.