

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கவில்லை. அவ்வப்போது மழை பெய்ததால் பகல்நேர வெப்பநிலை பெருமளவு குறைந்திருந்தது. இவ்வாண்டு கோடையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கே அதிகபட்ச வெப்பநிலை திருநெல்வேலியில் பதிவாகியிருந்தது. அக்னிநட்சத்திர நாட்களிலும்கூட வெப்பநிலை கணிசமாக குறைந்திருந்தது. வெப்பசலனத்தாலும், அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் உருவான புயல்களாலும் மாவட்டத்தில் பரவலாக மழை நீடித்தது. நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருகியது. கடந்த 29-ம் தேதி அக்னிநட்சத்திரம் முடிவுக்கு வந்தநிலையில் நேற்று திருநெல்வேலியில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்திருந்தது. அதேநேரத்தில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.