

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,784 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 400 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள 1,384 பேர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 25 வயதுடைய இளம்பெண் உள்பட 22 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 367 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி மாவட்டம் முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,207 ஆக அதிகரித்துள்ளது, என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.