

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், திருச்சி புளூ சன் பவுன்டேசன் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த ஆக்சிஜன் செறிவூட்டி களை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனைக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.ஸ்டாலின்குமார், எஸ்.இனிகோ இருதயராஜ், எம்.பழனியாண்டி, பி.அப்துல் சமது, மெட்ரோ ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜகோபால், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி கிளைத் தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களி டம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: கரோனா தடுப்பூசி போடும் முகாம்களுக்கு சில அரசியல் கட்சியினர் சென்று எவ்வளவு தடுப்பூசி வந்தது, எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது என்றெல்லாம் கேள்வி கேட்டு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியுள் ளனர். இனி தடுப்பூசி போடும் முகாம்களுக்கு சென்று பணிக்கு இடையூறு செய்யும் அரசியல் கட்சியினர் மீது பாகுபாடு காட்டாமல் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
தொடர்ந்து, திருச்சி கலையரங்க மண்டபத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, மணிகண்டம் இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு சித்தா கரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ரங்கத் தில் தோட்டக்கலைத் துறை சார்பில் 252 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.