

பெருந்துறைத் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கிராமப்பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ஊரடங்கு காலத்திலும் பணியாற்றும் பணியாளர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை.
எனவே, பெருந்துறை தொகுதிக் குட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் முன்களப்பணியாளர்களான ஊராட்சி செயலர், நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.