போலியான சித்த மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை : மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை
போலியான சித்த மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் எச்சரித்துள் ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில், போலியான சித்தா, ஆயுர்வேத, மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.
ஆங்கில மற்றும் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்து அரசு உரிமம் பெற்ற மருந்துகளாக இருக்க வேண்டும்.
அதாவது மருந்துகள் தயாரிக்க அரசு அனுமதி எண், மருந்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் பெயர்கள், மருந்துகள் கலந்துள்ள சதவீதம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, மருந்தின் விலை, தயாரிப்பு நிறுவனத்தின் முழு முகவரி இவை அனைத்தும் டப்பாக்களின் மீது அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்காணும் குறிப்புகள் உள்ள மருந்துகளை மட்டுமே மருந்து கடைகள், நாட்டு மருந்துக் கடைகள், ஆங்கில மருந்து கடைகளில் வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும்.
இந்த குறிப்புகள் இல்லாமல் யார் விற்பனை செய்தாலும், எந்த கடையில் இருந்தாலும், போலியான மருந்துகளை வாங்கி விற்பனை செய்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகளை வாங்கும் போது உரிய குறிப்புகள் இருக்கிறதா என பார்த்து வாங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
