சிறு, குறு விவசாயிகளுக்கு - சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் : அரியலூர் ஆட்சியர் தகவல்

சிறு, குறு விவசாயிகளுக்கு -  சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் :  அரியலூர் ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 3,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.22.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிறு,குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை ஒரு விவசாயி பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.50 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.

மேலும், சொட்டுநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் ஒரு விவசாயிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25,000, டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைக்க ரூ.15,000, ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.10,000, தரைநிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40,000 மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in