தைவானிலிருந்து தமிழகத்துக்கு திரவ ஆக்சிஜன் விரைவில் இறக்குமதி : நெல்லையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
``தைவானிலிருந்து 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் திரவ ஆக்சிஜன், இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது” என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை அமைச்சர் நேற்றுதொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் 535 நடமாடும் கடைகள் மூலம்காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. விற்பனை விலையை கண்காணிக்க திட்டஅலுவலர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. இதுவரை, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து120 டன் உற்பத்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர்உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் அங்கும் கரோனா பாதுகாப்பு மையங்கள் படுக்கை வசதிகளுடன் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளது.
மினி ஆட்டோ செல்லமுடியாத இடங்களிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்துமளிகை தொகுப்பு வழங்குவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காய்ச்சல் வருவதை முன்கூட்டியே கண்டறிய திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.
மக்கள் மனதில் தடுப்பூசி செலுத்துவதற்கான தயக்கம் இருந்துவருகிறது. இதனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, சீனாவிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஆக்சிஜன் கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் சென்னைக்கு வந்துள்ளன. இதுபோல், சிங்கப்பூரிலிருந்து 1500 ஆக்சிஜன் சிலிண்டர்கள், தைவானிலிருந்து 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் வருகின்றன, என்று தெரிவித்தார்.
ரெட்டியார்பட்டியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வழங்கினார். காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள தாமரைச்செல்வி கிராமத்துக்கு சென்று நடமாடும் மருத்துவ குழுவினருடன் கலந்துரையாடினார்.
மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, சா.ஞானதிரவியம் எம்பி, மு.அப்துல் வகாப் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
