

திருநெல்வேலி அருகே உணவில் விஷம் கலந்து வைத்து தெரு நாய்களை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
`கரோனா முழு ஊரடங்கை பயன்படுத்தி கேடிசி நகர் அருகே உள்ள ரவிசங்கர் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளில் உணவில் விஷம் வைத்து தெரு நாய்களை கொல்லும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடு,கோழி மற்றும் பறவைகளும் சாகடிக்கப்படும் நிலையுள்ளது. இதில், ஈடுபடுவோரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் உணவுக்காக அல்லாடும் விலங்குகளை வதைப்பதையும், அவற்றை விஷம் வைத்து கொல்வதையும் தடுக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.