

போச்சம்பள்ளி பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு மாமரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் உதிர்ந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஜிங்கல் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள மாந்தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் உதிர்ந்து சேதமானது.ஏற்கெனவே நிகழாண்டில் மாவிளைச்சல் 50 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மாங்காய்கள் சேதமாகி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கரோனா பரவல் காரணமாக மா விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களில் உள்ள மாங்காய்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காற்றுடன் பெய்த மழைக்கு சுமார் 5 டன்னுக்கு மேல் மாங்காய்கள் உதிர்ந்தன. இந்த மாங்காய்களை சேகரித்து மண்டிக்கு விற்பனைக்கு சென்றாலும் உரிய விலை கிடைக்காது.மாவிவசாயிகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வரும்நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.