

ஊழலை ஒழிப்பதற்காக ஜன் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சித் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை சின்னசுப்புராயலு தெரு வில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் டாக்டர் வி.ரெங்கராஜன் போட்டி யிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், தேர்தல் அறிக்கை வெளியிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
மாநிலச் செயலாளர் ரவி சீனிவாசன் சிறப்புரை ஆற்றி வேட்பாளர் ரெங்கராஜனை அறிமுகம் செய்து வைத்தார். தேர்தல் அறிக்கையையும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வெளியிட முதல் முறை வாக்காளர்கள் பெற்றுக் கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரியில் ஊழலை முழுமையாக ஒழிக்கத் தேவையான ஜன் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படும். புதுவையில் ஊழல் செய்தவர்கள் மீதும், பிப்டிக் நிலக் கரி ஊழல், சுனாமி குடியிருப்பு ஊழல், குறித்து சட்டப்படி விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் ஐஐஎம், ஐஐடி கல்வி நிறுவனங்களின் கிளைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். ஆண்டு தோறும் மத்திய அரசு தரும் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி செலவு விவரம் எம்பி அலுவலக தகவல் பலகையிலும், இணையத்திலும் வெளியிடப்படும் என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.