

சேலத்தில் நேற்று முழு ஊரடங்கால் 2-வது நாளாக சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஊரடங்கு விதி முறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, தேநீர், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் மட்டும் தினமும் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு மேல் அவசர மருத்துவ சேவைகளை தவிர்த்து, தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முழு ஊரடங்கால் நேற்று இரண்டாவது நாளாக சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் புதிய, பழைய பேருந்து நிலையம், சின்னக்கடை வீதி, ஜங்ஷன், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள், வீதிகள் வெறிச்சோடின.
மாவட்ட பகுதிகளில் எஸ்பி தீபாகாணிகர் தலைமையிலான போலீஸாரும், மாநகர பகுதியில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட பகுதியில் 26 இடங்களிலும், மாநகர பகுதியில் 16 இடங்களிலும் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகர பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாரும், மாவட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஊரடங்கு காலத்தில், தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.