நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் - கரோனா நிவாரண உதவித்தொகை வழங்க இன்று முதல் டோக்கன் விநியோகம் :

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் -  கரோனா நிவாரண உதவித்தொகை வழங்க இன்று முதல் டோக்கன் விநியோகம் :
Updated on
1 min read

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் மாவட்ட வாரியாக உதவித்தொகை ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடி யாக வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று முதல் 14-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகிக்கப்படும்.

இதையடுத்து 15-ம் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 900 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் இத்தொகை ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் பிரித்து வழங்கப்படும். நுகர் பொருள் வாணிபக் கழக கட்டுப் பாட்டில் உள்ள கடைகளுக்கு உணவுத் துறை மூலம் நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஈரோடு

தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி, ஈரோட்டில் உள்ள 7.13 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி முதல் தவணைத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இன்று முதல் (10-ம் தேதி) வரும் 12-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

எனவே, அரிசி குடும்ப அட்டை தாரர்கள் வரும் 15-ம் தேதி முதல் தலா ரூ.2000 வீதம் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்களில், குறிப்பிட்ட நாளில், சமூக இடைவெளியினை பின்பற்றி முகக்கவசம் அணிந்து ரேஷன் கடைகளில் உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in