வேலூர் அருகே துணிகரம் - தம்பதியை தாக்கி 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு :

வேலூர் அருகே துணிகரம்  -  தம்பதியை தாக்கி 10 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு :
Updated on
1 min read

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (33). இந்நிலையில், இவரும் இவரது மனைவி தேவிகா (28)வும் தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரில் கடந்த 3-ம் தேதி காலை நடைபெற்ற இவரது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், இரு சக்கர வாகனத்தில் ஆற்காட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் பூஞ்சோலை அருகே வந்து போது அவர்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் ஏழுமலை வாகனத்தை மோதியுள்ளனர்.

இதில், கட்டுப்பாட்டை இழந்த ஏழுமலை தனது மனைவி தேவி காவுடன் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, தேவிகா மற்றும் ஏழுமலையை சரமாரியாக தாக்கிய அவர்கள், தேவிகா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த தம்பதி மீட்கப்பட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து ரத்தினகிரி காவல் நிலையத்தில் நேற்று ஏழுமலை புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in