

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சித் தலைவர் பீர் மஸ்தானிடம் உதவி கோரினர்.
இதையடுத்து, மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் சித்திக் தலைமையில், ஹபீப், அர்ஷத், இஸ்மாயில் உள்ளிட்டோரைக் கொண்ட தன்னார்வ மீட்புக் குழுவினர் பெண்ணின் உடலை பெற்று, எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் வி.எம்.சத்திரம் தகன மேடைக்கு கொண்டுசென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதச் சடங்கை செய்து. தகனம் செய்தனர்.
கரோனா தொற்று இரண்டாம் அலை பரவத் தொடங்கியதில் இருந்து திருநெல்வேலியில் கரோனாவால் உயிரிழந்த 8 பேரின் உடல்களை எஸ்டிபிஐ தன்னார்வ மீட்புக் குழுவினர் நல்லடக்கம் செய்துள்ளனர்.