

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் முதன்முறையாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு நாளான நேற்று, சேலம் மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் மருந்துக் கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் 100 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன.
சாலைகளில் ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள், சில கார்கள், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லாரிகள் இயங்கின. இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. உணவகங்களில் பார்சல்களுக்கு அனுமதி, உழவர் சந்தைகள் செயல்பட அனுமதி இருந்தபோதும், மக்கள் கூட்டம் இல்லாததால் விற்பனை மந்தமாக இருந்தது.
தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் சேலம் புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வழக்கமான பரபரப்பின்றி அமைதி நிலவியது.
இதேபோல, சேலம் போஸ் மைதானம் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக பழைய பேருந்து நிலையமும், அதன் அருகில் உள்ள வஉசி பூ மார்க்கெட், மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ஆகியவையும் வெறிச்சோடியது. மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்ததால், சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமைதியாக நடந்தது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வெளியூர் பயணங்களை தவிர்த்தனர். நேற்று முகூர்த்த நாள் என்ற போதிலும், பேருந்து வசதி இல்லாமை, முழு ஊரடங்கு கட்டுப்பாடு, போலீஸாரின் கெடுபிடி பயம், எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா பரவும் அச்சம் ஆகிய காரணங்களால் பொது இடங்களில் நடமாட அச்சம் ஏற்பட்டது.
இவ்வாறு கூறினர்.
நாமக்கல்லில் தீவிர கண்காணிப்பு
அரசின் விதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
ஊரடங்கால் முடங்கிய ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான உணவகங்கள், டீ கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஈரோடு காந்திஜி சாலை, சின்ன மார்க்கெட் பகுதி, சூளை, சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கொல்லம்பாளையம் உட்பட 13 இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. முதியவர்கள், வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள், அம்மா உணவகங்களில் வந்து பாத்திரங்கள் மூலம் உணவுகளை வாங்கிச் சென்றனர்.
ஈரோட்டில் ஊரடங்கு காரணமாக நேற்று காய்கறி மார்க்கெட் இயங்காது என்றும், உழவர் சந்தைகள் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், சம்பத் நகர், பெரியார் நகர், குமலன்குட்டை பள்ளி மற்றும் பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகள் நேற்று இயங்கவில்லை.
விவசாயிகள் காய்கறிகளை எடுத்து வர போதிய ஏற்பாடுகள் செய்யாததால், உழவர் சந்தைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டது. உரிய காரணமின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.