ஈரோட்டிலிருந்து வெளியூருக்கு இயக்கப்படும் கடைசி பேருந்துகளின் விவரம் அறிவிப்பு :
இரவு ஊரடங்கு காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் கடைசி பேருந்துகள் குறித்த அறிவிப்பினை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 11 அரசு போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து உள்ளூர், வெளியூர் என 800-க்கும் மேற்பட்ட பேருந்து கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம் இருந்து வந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக, பேருந்துகள்இயக்கத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இரவில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படுவதால், பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
இதன்படி ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணி வரை மட்டுமே, பேருந்துகள் இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இரவு 7.30 மணி வரையும், கோவைக்கு 7.30 மணி வரையும், திருப்பூருக்கு 8.30 மணி வரையும், பழநிக்கு 7 மணி வரையும், சேலத்துக்கு 8.30 மணி வரையும், மதுரைக்கு மாலை 5 மணி வரையும், திருச்சிக்கு மாலை 6 மணி வரையும், கரூருக்கு இரவு 8 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.
வெள்ளகோவிலுக்கு 8.30 மணி வரையும், ராசிபுரத்துக்கு 8 மணி வரையும், நாமக்கல்லுக்கு 8 மணி வரையும், மேட்டூருக்கு 8.30 மணி வரையும், அந்தியூருக்கு 8.30 மணி வரையும், பவானிக்கு 9.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
