கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள - 20 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டும் பணி :
வேலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக 20 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ஆட்டோ, கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் 20 ஆயிரம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை தொடங்கியுள்ளனர். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியார் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.
