

கிருஷ்ணகிரி அருகே நீரில் மூழ்கி ஐடிஐ மாணவர் உயிரிழந்தார். மாணவரது உடலை மீட்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தாரப்பள்ளி அருகில் உள்ள பெரிய செட்டிப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி. இவரது மகன் பலராமன் (18). இவர் பர்கூர் ஐ.டி.ஐ.,யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், தனது நண்பர்கள் 10 பேருடன் செந்தாரப்பள்ளி அருகில் பழைய அரசு கல்குவாரியில் தேங்கியுள்ள குட்டையில் குளிக்கச் சென்றார். பலராமன் மட்டும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்குச் சென்ற பலராமன் நீரில் மூழ்கினார்.
இதுதொடர்பாக தகவலறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் பழனி உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் குட்டையில் படகில் சென்று பலராமனை தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று காலை 6 மணி முதல், பர்கூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களுடன் மீண்டும் தேடுதலில் ஈடுபட்டனர். இதையடுத்து முறையாக தேடுதலை நடத்தவில்லை எனக்கூறி பலராமனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமா தானப்படுத்தியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கல்குவாரி அருகே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால், பர்கூர் டிஎஸ்பிதங்கவேலு தலைமையில் போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும், பலராமன் கிடைக்க வில்லை.
நேற்று மாலை 4.45 மணியளவில் மீட்பதில் தாமதமாகிறது எனக்கூறி கிராம மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மாலை 5.15 மணிக்கு பலராமன் உடல் மீட்கப்பட்டதால், மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.