மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு  :

மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு :

Published on

சங்கரன்கோவில் அருகே உள்ள உமையத்தலைவன்பட்டி கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த வழியாக அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (19) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரிடம் ஊர்வலத் தில் வந்தவர்கள் தகராறு செய்து, தாக்கியதாக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், 3 பேரை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது எனக்கூறியும், 3 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட உமையத்தலைவன் பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in