

சாலை அமைக்கக் கோரி இளம்பிள்ளை அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி உட்பட்ட புளியம்பட்டி 10-வது வார்டு பூட்டுக்காரன் வீதியில் சாலை அமைக்க கடந்த ஜனவரி 23-ம் பூமி பூஜை நடந்தது. அதன் பின்னர் பணி தொடங்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாமுண்டி நகரில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பூமி பூஜை போட்ட பகுதியில் சாலை அமைக்காமல் வேறு பகுதியில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சாமுண்டி நகரில் சாலை அமைக்க கான்கிரீட் கலவை இயந்திரத்தை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மகுடஞ்சாவடி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பூட்டுக்காரன் வீதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.