வாடிக்கையாளர் முகக்கவசம் அணியாவிட்டால் - கடை உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வணிகர்கள் எதிர்ப்பு :

வாடிக்கையாளர் முகக்கவசம் அணியாவிட்டால்  -  கடை உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வணிகர்கள் எதிர்ப்பு :
Updated on
1 min read

வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அதற்கான அபராதத் தொகை கடை உரிமையாளர் களிடம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது, என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையில் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அரசு அறிவுறுத்தலின்படி அனைத்து வணிக நிறுவனங்களிலும் கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்கப்படும். ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பர். அதேவேளையில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் கொடுத்து கடைகளுக்குள் செல்ல அனுமதிக்கிறோம்.

எனினும் சில நேரங்களில் அதிகாரிகள் சோதனை செய்ய வரும்போது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாதிருப்பின் அதற்கான அபராதத்தை வணிக நிறுவனத்திடம் வசூலிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது. எப்படி பொது இடத்தில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறதோ அதே போலவே நிறுவனங்களுக்குள் முகக்கவசம் அணியாதோருக்கு அவர்களிடமே அபராதம் வசூலிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதில் நிறைய அத்துமீறல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. மேலும், இதனால் வணிகர்களும், வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை வணிக நிறுவனங்களில் காட்சிப்படுத்தவும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதன் இணைப்பு சங்கங்கள் மூலமாக மாவட்டம் முழுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தி வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in