

திருப்பூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) நடைபெறுவதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அட்டையை அளிக்க இயலாதவர்கள், கீழ்குறிப்பிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடி மையத்தில் காண்பித்து வாக்களிக்கலாம்.
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். இந்த விவரங்கள் அடங்கிய பதாகை, 3,343 வாக்குச்சாவடிகளுக்கு முன்பும் ஒட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.