ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில் : 30 தங்க நாணயங்கள் பறிமுதல் :

ஈரோட்டில் பறக்கும் படை சோதனையில்  : 30 தங்க நாணயங்கள் பறிமுதல் :
Updated on
1 min read

தேர்தல் பறக்கும்படையினர் ஈரோட்டில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை இக்குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, பவானியைச் சேர்ந்த சிங்காரவேலன் (41) என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்ததில், ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது.

பவானியில் நகைக்கடை வைத்துள்ளதாகவும், ஈரோட்டில் உள்ள ஒருவருக்கு தங்க நாணயங்களை எடுத்துச் செல்வதாகவும் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரிடம் இதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் 30 தங்க நாணயங்களை பறிமுதல் செய்து, ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைக் காட்டினால், நாணயங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in