சுரங்கம் தோண்டியபோது - மயங்கி விழுந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையிலிருந்து ஓட்டம் :

சுரங்கம் தோண்டியபோது  -  மயங்கி விழுந்த 2 இளைஞர்கள்  மருத்துவமனையிலிருந்து ஓட்டம் :
Updated on
1 min read

நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா (65). இவரது மகன்கள் சிவமாலை (40), சிவவேலன் (43) ஆகியோர் வீட்டின் பின்புறம் புதையல் இருப்பதாகக் கூறி 40 அடி ஆழத்தில் குழி தோண்டி 7 அடியில் சுரங்கப்பாதையும் அமைத்துள்ளனர். கடந்த 28-ம் தேதி பன்னம்பாறையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் நிர்மல் கணபதி (17), நாசரேத் கோடதநகர் கந்தவேல் மகன் லட்சுமண பெருமாள் என்ற ரகுபதி (47) ஆகியோர் சுரங்கம் அமைத்த பகுதியில் வேலை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சிவமாலை, சிவவேலன், நிர்மல் கணபதி, ரகுபதி ஆகிய 4 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். வைகுண்டம் தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரகுபதி மற்றும் நிர்மல் கணபதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. சிவவேலன் மற்றும் சிவமாலை ஆகிய இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி அனுமதியின்றி சுரங்கம் அமைத்ததாக சிவவேலன், சிவமாலை, சிவவேலனின் மனைவி ரூபா (40) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவமாலை மற்றும் சிவவேலன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in