விபத்தில் பெண் உயிரிழப்பு - வழக்குப் பதிவு செய்ய தாமதத்தால் சாலை மறியல் :

விபத்தில் பெண் உயிரிழப்பு -  வழக்குப் பதிவு செய்ய தாமதத்தால் சாலை மறியல் :
Updated on
1 min read

வாழப்பாடி அருகே விபத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகவனேஸ்வரி (34). இவரது கணவர் பூபதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் சுகவனேஸ்வரி வீட்டின் அருகேயுள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிட நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் சுகவனேஸ்வரி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சுகவனேஸ்வரி உயிரிழந்ததால், வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்வதில் சிக்கலும், தாமதமும் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த சுகவனேஸ்வரியின் உறவினர்கள் நேற்று காலை சுகவனேஸ்வரி உடலை வாங்க மறுத்து, அத்தனூர் பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வாழப்பாடி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து, மறியலை கைவிட்டு சுகவனேஸ்வரியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in