

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதியில் 14 வேட்பாளர்கள், பாளையங் கோட்டை தொகுதியில் 10 வேட்பாளர்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 12 வேட்பாளர்கள், நாங்குநேரி தொகுதியில் 15 வேட்பாளர்கள், ராதாபுரம் தொகுதியில் 25 வேட்பாளர்கள் என, மொத்தம் 76 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 1,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக மொத்தம் 2,763 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,311 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,562 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. வேஷ்ணு மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் அச்சிட்ட படிவங்களை பொருத்தும் பணி அந்தந்த வட்டாட் சியர் அலுவலகங்களில் நேற்று தொடங்கியது.
தென்காசி
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நடைபெற்றது.