மன்னார்குடி ராஜகோபால சுவாமிகோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி ராஜகோபால சுவாமிகோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம் :  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோ ரதம் நடைபெற்றது. சத்தியபாமா-ருக்மணி சமேதராக ராஜகோபால சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.

பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணி அளவில் ராஜகோபால சுவாமி வெண்ணை திருடும் கண்ணன் அலங்காரத்தில் வெள்ளிக் குடத்தை கையில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, கோயிலின் நான்கு வீதிகள் மற்றும் மேல ராஜவீதி, பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபத்துக்கு காலை 11 மணி அளவில் ராஜகோபால சுவாமி வந்தடைந்தார். வீதியுலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மீது வெண்ணையை வீசி வழிபாடு செய்தனர்.

பின்னர், மதியம் ராஜகோபாலசுவாமிக்கு செட்டியார் அலங்காரம் நடைபெற்றது. இரவு வெட்டும் தங்கக் குதிரை வாகனத்தில் ராஜகோபால சுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருள, வீதியுலா நடைபெற்றது.

வெண்ணைத்தாழி உற்சவத்தையொட்டி, வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதன் காரணமாக மன்னார்குடி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று (மார்ச் 20) தேரோட்டம் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in