

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கத்தையும். மாற்றுத்திறனாளி களின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியையும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி 3-ம் மைல், பாலிடெக்னிக், விவிடி சிக்னல், நீதிமன்ற வளாகம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வஉசி கல்லூரி
புதிய முயற்சியாக மாணவ, மாணவியர் 'VOTE 2021' எனும் வடிவில் மனிதச் சங்கிலி அமைத்திருந்தனர். மேலும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம், ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த வாரம் முழுவதும் விழிப்புணர்வு உரைகள், கலைப்போட்டிகள், வீதி நாடகம், குறும்படம் , இணைய வழி விழிப்புணர்வு உருவாக்கம், நிலைக்காட்சி மற்றும் வாசகப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளதாக முதல்வர் வீரபாகு தெரிவித்தார். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் நலத்துறை, தேசிய தரைப்படை, நாட்டு நலப்பணித் திட்டக் குழுவினர் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் செய்திருந்தனர்.