

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
திருநெல்வேலி புரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கிஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு காணப்பட்டது.
தென்காசி
சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் சுமார் 80 வங்கிகளில் பணிபுரியும் 850 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும். ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும்” என்றனர்.
தூத்துக்குடி
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொழிற்சங்க ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர வங்கி ஊழியர் சங்கத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர். ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் அவதிக் குள்ளாயினர்.