திண்டுக்கல் அருகே - ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு :

திண்டுக்கல் அருகே  -  ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே ஆத்தூர் நீர்த்தேக் கத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் நீர்த்தேக்கம் உள்ளது. பருவ மழையால் நீர்த்தேக்கம் தண்ணீர் நிரம்பி உள்ளது. விடுமுறை நாளான நேற்று நீர்த்தேக்கத்தில் பலர் குளித்துக் கொண்டிருந்தனர். நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். உடன் வந்த மற்றவர்கள் காப்பாற்றுமாறு குரல் கொடுத்தனர்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து இளைஞரை காப்பாற்ற முயன்றனர். மீட்புப் பணியின்போது இளைஞருடன் வந்தவர்களும் நீரில் மூழ்கினர். ்தகவல் கிடைத்ததும் ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் வந்து நீரில் மூழ்கிய ஐந்து பேரின் உடல்களை மீட்டனர்.

இறந்தவர்களில் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன்(19), லோகநாதன்(19), செல்வபரணி(19) ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தனர். மேலும் பரத்(16) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திக்பிரபாகரன்(19) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை தினம் என்பதால் ஆத்தூர் நீர்த்தேக்கத்துக்கு நண்பர்கள் ஐந்து பேரும் குளிக்கச் சென்றது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in