நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட - வேட்பாளர்கள் கூடுதல் செலவு செய்வதை தடுக்க வேண்டும் : கிருஷ்ணகிரி செலவின பார்வையாளர் உத்தரவு

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட -  வேட்பாளர்கள் கூடுதல் செலவு செய்வதை தடுக்க வேண்டும் :  கிருஷ்ணகிரி செலவின பார்வையாளர் உத்தரவு
Updated on
1 min read

தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக் கப்பட்ட தொகையைவிட கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கூடுதல் செலவு செய்வதை தடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி செலவினப் பார்வையாளர் கல்யாணம் தெரிவித்துள்ளர்.

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை, நிலையான குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையாளர் குழு மற்றும் தேர்தல் கணக்கு குழு ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் கல்யாணம் தலைமை வகித்துப் பேசியதாவது:

அனைத்து குழுவினரும் வாகனச் சோதனை செய்யும் போது பொதுமக்களிடம் கனிவுடனும், அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சோதனையின் போது ஒருவரிடம் ஒரு அலுவலர் மட்டுமே பேச வேண்டும். குழுக்களில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட வாக்காளர்களைக் கவரும் வகையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கூடுதல் செலவு செய்வதை தடுக்க வேண்டும்.

தணிக்கையின் போது பொது மக்கள் யாரேனும் கடுமையாக நடந்துக் கொண்டால் முதலில், அவர்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் அவர்களிடம் பேச வேண்டும். பதிலுக்கு நாமும் கடுமையாக பேசக் கூடாது. வீடியோ பார்வைக் குழு அன்றைய நிகழ்வுகளை பார்வையிட்டு தேர்தல் கணக்கு குழுவுக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு குழுவினர் விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செலவினப் பார்வையாளர் பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சந்திரா, உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்திஜ்ரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்கள் நியமனம்

இவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளைக் கண்காணிக்க, செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊத்தங்கரை, பர்கூர் தொகுதிக்கு செலவின பார்வையாளராக சுவன்தாஸ் குப்தா, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு கல்யாணம், ஓசூர், தளி தொகுதிக்கு பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியுடன், தேர்தல் செலவினங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in