இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் அளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்வதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் பிரிவு செய்து வருகிறது. அந்த வகையில், வாணியம் பாடி நியூடவுன் பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மோகன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வரும் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ளனர். இளம் வாக்காளர் களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முதலாக வாக்களிப்பது என்பது ஒரு வகையான மகிழ்ச்சியை தரும். பொதுவாக, தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும்.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். கூட்ட நெரிசல், வேலை பளு, வெயில், மழை போன்ற காரணங்களாக வாக்களிக்கும் நேரத்தை தள்ளிப்போடக்கூடாது.

குறிப்பாக, முதல் முறையாக வாக் களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதை தெரிந்துக்கொண்டு வரும் ஏப்ரல்6-ம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி, செலுத்திய வாக்குகளை யாருக்கு அளித்தோம் என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப் போம், தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என ஆட்சியர் உறுதி மொழி ஏற்க அதை மாணவர்கள் பின்தொடர்ந்து கூறினர்.

இறுதியாக, கல்லூரி வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பர பதாகையில் 100 சதவீதம் வாக் களிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in