

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பேருந்துகள் நேற்று இயங்கவில்லை. கிராமப்பு றங்களுக்கு பஸ்கள் அடியோடு இயக்கப்படாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்கள் உள்ளன. இந்த 3 மண்டலங்களில் உள்ள 24 பணிமனைகளில் இருந்து 1,985 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்தன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று 50 சதவீத பேருந்துகள் இயக்கப் படவில்லை. கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் பெருமளவுக்கு இயக்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
நகரப் பேருந்துகளை தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள் விரைவில் பணியமர்த்தப்பட்டு, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பேருந்துகள் தடையின்றி இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று காலையில் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. வெளியூர் செல்வதற்காகவும், பணி நிமித்தமாக வந்தவர்களும் பேருந்து இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்துகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
நாகர்கோவில்
35 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் பணியில் ஈடுபட்டு வருவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை. நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.