பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் தபெதிக நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் தபெதிக நூதன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று சமையல் எரிவாயு உருளை அட்டைகளை பலூன்களில் கட்டி பறக்கவிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் இல.அங்கக்குமார் தலைமை வகித்தார். மாநகர், மாவட்ட தலைவர் சண்.முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், சமூக விடுதலைகட்சியின் ஆறுமுகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசும்போது, "பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை கடுமையாக உயர்ந்திருப்பது, பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு, பலர் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு, விண்ணைத் தொடும் அளவுக்கு இருப்பதால் அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சுட்டிக்காட்டும் வகையில், அனைவரின் கவனத்தை ஈர்க்க பலூன்களில் சமையல் எரிவாயு மாதிரி அட்டைகளை கட்டி, வானில் பறக்க விடப்பட்டது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in