

மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலய 101-வது திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணிக்கு புது நன்மை திருப்பலி நடந்தது. இதில், மதுரை உயர் மறைமாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் தலைமை வகித்து திருப்பலி நடத்தினார். மாலை 6 மணிக்கு திருத்தல பெருவிழா திருப்பலி நடந்தது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து லூர்து அன்னை உருவம் தாங்கிய மின் அலங்காரத் தேர் பவனியை ஆயர் ஆசி வழங்கி தொடங்கி வைத்தார். புதூர் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், மதுரை மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் கடைசி நாளான இன்று காலை திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.