இரட்டைக் கொலை வழக்கில் 11 பேர் கைது

இரட்டைக் கொலை வழக்கில் 11 பேர் கைது
Updated on
1 min read

ஈரோட்டில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 11 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்தவர் குணா என்ற குணசேகரன்(29). ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கலை என்ற கலைச்செல்வன் (31). இவர்கள் இருவரும் கடந்த 10-ம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பெரியகுட்டை வீதியில் சென்று கொண்டிருந்தபோது கும்பல் ஒன்று கலைச்செல்வனையும், குணசேகரனையும் கத்தி, உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தது. சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொலை வழக்கு தொடர்பாக வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (24), அன்னை சத்யாநகர் கார்த்தி (27), செட்டிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த மதன் (26), ஜான்சிநகர் அழகிரி (23) ஆகிய 4 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஈரோட்டைச் சேர்ந்த கிங்சிவா (25), முரளிதரன் (24), தமிழரசன் (22), லோகேஸ்வரன் (22), கிருஷ்ணன் (30), பர்கான் (32), பத்மநாபன் (30) ஆகிய 7 பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in