பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தனியார் மூலம் ஆன்லைன் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தனியார் மூலம் ஆன்லைன் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தனியார் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பத்துக்கும் குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்துஇன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்ய திறனாய்வு தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 5,817 பேர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் பயிற்சி பெறுகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. தேசிய அளவில் நடக்கும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான சீருடை,காலணி போன்ற அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், பொதுத் தேர்வுகள்பற்றிய அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in