விருதுநகர் அருகே அரசு பேருந்து நடத்துநர் வெட்டிக் கொலை

சந்தனமகாலிங்கம்
சந்தனமகாலிங்கம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம்(37). இவர் அரசு போக்குவரத்துக் கழகம் சாத்தூர் பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் போக்குவரத்துக் கழக சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

சந்தனமகாலிங்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள வாகை மரத்தை வெட்டினார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன் என்பவரது மின் வயரில் மரக்கிளை விழுந்தது. இதனால் அருகே வசிக்கும் ஐயப்பன், சந்திரசேகரன் ஆகியோரது வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் சந்திரசேகரன், அவரது சகோதரர் குணசேகர், ஐயப்பன், ராஜா ஆகியோர் சந்தனமகாலிங்கத்திடம் தகராறு செய்தனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரியத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் காலையில் வந்து சரிசெய்துவிடுவார்கள் என்றும் சந்தனமகாலிங்கம் கூறியுள்ளார்.

பின்னர், இரவு நேரத்தில் சந்தனமகாலிங்கம் வெளியே சென்று வருவதாக மனைவி சுதாவிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து காட்டுப் பக்கம் சென்றார். அவரை சுதா பின்தொடர்ந்து சென்றார். பெருமாள் கோயில் அருகே சந்தனமகாலிங்கம் சென்றபோது அவரை சந்திரசேகர், குணசேகர், ஐயப்பன், ராஜா ஆகியோர் பின்தொடர்ந்து சென்று வழிமறித்து வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட சுதா கூச்சலிட்டுள்ளார். அவரை சந்திரசேகர் உட்பட 4 பேரும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகர் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in