

சேலம் மாநகர காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் வளைவில் இருந்து பேரணியை தொடங்கிவைத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பேசியதாவது:
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம். கடந்த 1995-ம் ஆண்டு எனது சகோதரர் விபத்தில் இறந்து விட்டதால், அந்த வேதனை என்னவென்பதை நான் அறிவேன். எனவே, நாம் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் செந்தில், சந்திரசேகர், போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.