லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு கோரிக்கை

லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்  மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

கடந்த 9 மாதமாக லாரிகள் இயக்கப்படாததால் 2 காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதமாக லாரிகள் இயக்கப்படாததால் 2 காலாண்டு வரியினை ரத்து செய்ய வேண்டும். தெலங்கானா அரசு லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலாண்டு வரியை ரத்து செய்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக மக்கள் கேட்காமலே அரசு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கி உள்ளது. அதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. ஆனால், லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்தால் அரசுக்கு ரூ.1,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க கூடிய லாரி உரிமையாளர்களின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும் என்றால் 12.50 லட்சம் லாரி உரிமையாளர்களின் காலாண்டு வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் 13 மாநிலங்களில் காலாண்டு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு வரிகளை ரத்து செய்யாவிட்டால் அனைத்து வாகன உரிமையாளர் சங்கத்தினரை திரட்டி விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும், என்றார். சங்க செயலாளர் பி. பொன்னுசாமி, பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in