முதல்வர் பழனிசாமி இன்று நெல்லை வருகை பி.எச். பாண்டியன் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்

முதல்வர் பழனிசாமி இன்று நெல்லை வருகை பி.எச். பாண்டியன் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்

Published on

தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திருநெல்வேலி வருகிறார்.

பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை தலைவர் நாற்காலியில் அவர் அமர்ந்துள்ளது போன்ற சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

குடிநீர், கழிப்பிட வசதியுடன், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ள இந்த மணிமண்டபத்தை வாகனத்தில் அமர்ந்தவாறு சுற்றிப்பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. .

இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வரும் முதல்வர் அங்கிருந்து காரில் சேரன்மகாதேவி செல்கிறார். வழியில் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவிந்தபேரி விழாவில் பங்கேற்ற பின்னர் முதல்வர் சேலம் செல்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in