திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில்  தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் தோட்டக் கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் விமலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்துக்கு தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி மற்றும் பழப்பயிர்களில் நுண்ணீர் பாசன அமைப்புகளை 6,500 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க ரூ.4.55 கோடி நிதி பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் மற்றும் மழைப்பொழிவு குறைந்து வருவதாலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கிலும் இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.

சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரையும், பெரிய விவசாயிகள் 12.5 ஹெக்டேர் வரையும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் துணைநிலை நீர் மேலாண்மை செயல்திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு பதிவு செய்யும் விவசாயிகள், பாசன நீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக ஹெக்டேருக்கு பிவிசி குழாய்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், தரைமட்ட நீர் சேகரிப்புத் தொட்டி கட்ட ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம் 114 கன மீட்டர் அளவுக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், டீசல் அல்லது மின் மோட்டார்கள் பொருத்த ரூ.15 ஆயிரம் வரையும், ஆழ்துளை கிணறு அங்கீகாரம் செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்க ரூ.25 ஆயிரமும் மானியம் வழங்கப் படுகிறது.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், கணினி சிட்டா, சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்றுகளுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in