

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சியளித் தார். 9 மாதங்களுக்குப் பிறகு கோயில் மாட வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கரோனா ஊரடங்கால் தீபத் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.
மேலும், கோயில் மாட வீதிகளில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு ஐந்தாம் பிரகாரத்தில் பக்தர்கள் இல்லாமல் சுவாமி வீதியுலா நடத்தப்பட்டது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார். நேற்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
2,668 அடி உயர அண்ணா மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு சாற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் எழுந்தருளிய போது பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர்.
இதையடுத்து, திருமஞ்சனம் கோபுரம் வழியாக சுவாமி புறப்பட்டு மாட வீதிகளில் பவனிவந்த நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாணிக்கவாசகர் மாட வீதியுலாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆம்பூர்
அதேபோல, ஆம்பூர் அடுத்த வடச்சேரி சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் ஆருத்ராவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பிரகார உலா நடைபெற்றது. தொடர்ந்து, கோபுரவாசலில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.