திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு  சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

திண்டுக்கல் மலைக்கோட்டைப் பகுதியில் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் மலைக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக் கோட்டையைச் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலைக் கோட்டையில் உள்ள கோயிலில் வழிபடவும் செல்லும் போராட்டம், தீபம் ஏற்றச் செல்லும் போராட்டம் என அவ்வப்போது இந்து அமைப்புகளால் அறிவிக்கப் படுவதும் அந்நேரங்களில் அவர்களைத் தடுக்க போலீஸார் மலைக் கோட்டைப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

நேற்று பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் செல்ல சில அமைப்புகள் முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிட்டன. இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளும் மலைக் கோட்டை செல்ல உரிமை கோரின. இதனால், ஏற்படும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில்கொண்டு திண்டுக்கல் மலைக்கோட்டைப் பகுதிகளில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து மலைக் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள், மேல் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போலீஸார் நேற்று இரவு வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தடை உத்தரவு காரணமாக மலைக் கோட்டையைக் காண நேற்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in